சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2012

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உலகில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும்  எமது புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

பழையன கழிதலும் புதியன புகுதலும் -என்ற கோட்பாட்டில் வாழும் நாம் கடந்த ஆண்டில் நடந்த கசப்பான அனுபவங்களின் துணை கொண்டு இனி வரும் நாட்களில் அதுப்போன்ற அனுபவங்களை மீண்டும் ஏற்படுத்தி கொள்ளாமல் வாழ்ந்தால் போதும்.

குருவின் துணை கொண்டு தான் நாம் இந்த பிறவியை முடித்து பிறவா
வாழ்க்கையை  மேற்கொள்ளவேண்டும் .

பாம்பாட்டி சித்தரின் பாடல் -குருவணக்கம்

பொய்ம்மதங்கள்  போதனைசெய் பொய் குருக்களைப்
புத்தி  சொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய் மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே

மதம் பிடிப்பது என்பது விலங்குகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல . மதங்களை தாண்டி மனித உள்ளங்களை  நேசித்தால் போதும் .  எல்லா  மதங்களும்   மனிதனால் உருவாக்கப்பட்டவை தான் .

உண்மையான மதத்தை நமக்கு விளக்கம் கூற சற்குருவினால் மட்டும்  தான் முடியும் .

இவ்வாண்டில் எந்தவித  சாதி  சண்டையும், மதக்கலவரங்களும் ஏற்படாமல்
இருக்க எல்லாவல்ல சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி வேண்டி கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 29 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-சிவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி கேட்டுதர்க்கிணங்க எனக்கு தெரிந்த
விளக்கத்தை இங்கே தருகிறேன்.

முதல் பாடலில் நாடு,நகரம்,  வீடு ,நல்ல வாழ்க்கை ,இல்லாள் , மைந்தர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கின்றாயே ,இந்த கூடும் ஒரு நாள் அழிந்து போகுமே , இப்படி அழிந்து போகும் கூட்டினை வைத்து கொண்டால் பிறவிகள் பல எடுக்க வேண்டி இருக்குமோ கூறு நெஞ்சே என்று கேட்கிறார் . இந்த கூட்டினை அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?


இரண்டாவது பாடலில் கூறுவது , என்னதான் படித்தாலும் ,எத்தனை ஏடுகள் படித்தாலும் எத்தனை  நூல்கள் படித்தாலும் ஒன்றும் புண்ணியம் இல்லை என கூறுகிறார்.  இன்று நிறைய ஏடுகள் தியானத்தை பற்றி நமக்கு கிடைக்கிறது ,ஆனால் ஏடுகளை படித்துவிட்டு நாம் தியானத்தை தொடர்ந்தால் பல விளைவுகளை தான் சந்திக்க வேண்டீருக்கும் . எனவே குருவினை கொண்டு இது போன்ற
பயிற்சிகளை கற்று கொள்ளவேண்டும் .

முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி மனிதன் தனது இறுதி காலத்தினை கழிக்க கானகத்தை தான் தேர்வு செய்து கொள்கிறான் .ஏனெனில் அங்கு தான் மன  நிம்மதி கிடைக்கும் என நினைக்கிறான். பல சித்திகளை பெறுவதற்காக பல மாதங்களாக காட்டில்
தவம் செய்து கொண்டு மாண்டு போனவர்கள் எண்ணிலா கோடி ஆகும். இதுவும் நமக்கு தேவை இல்லை . இங்கு கானல் நீரினை உண்மையான நீர் என நினைத்துகொண்டு நாம் அலைவதை குறிப்பிடுகிறார். அதுபோல நாட்டிலே தெய்வம் இங்கு இருக்கிறது அங்கு இருக்கிறது என்று மக்கள் அலைவதை பார்த்து தெய்வம் என்பது நமது கூட்டினுள் தான் இருக்கிறது என்று தெளிவாக கூறுகிறார்.

இது உண்மையும் கூட தான் , நமது ஜீவன் நம்மை விட்டு போனால் நாம் சடம் ஆவோம் .இந்த உடலையும் உயிரையும் ஆட்டுவிப்பவனே இறைவன் ஆவான் .


மூன்றாம் பாடலில் நாம் எவ்வாறு இந்த ஆக்கையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறார்  . இதற்க்கு முதலில் நமக்கு ஞானம் கிடைக்கவேண்டும்,  ஞானம் கிடைக்க நல்ல குரு வேண்டும் , நல்ல குரு கிடைத்தால் வாசி போன்ற பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்து உண்மையான கயிலையை நமக்கு காட்டுவார்கள் , அவ்வாறு கண்ட கயிலையில் குண்டலினி மூலம் தீபத்தை நெற்றியின் புருவ மையத்தில் எப்படி ஏற்றுவது என்று கற்று கொடுப்பார்கள் . அவ்வாறு ஏற்றிய தீபத்தின் மூலம் உண்மையான சிவலிங்கத்தை நமக்கு காட்டுவார்கள் .

நமது உயிரின் வடிவம் சிவலிங்கம் ஆகும். இதை தான் நமது சித்தர்கள்
எல்லா கோவிலிலும் நாகலிங்கத்தை பிரதிஸ்டை பண்ணி இருப்பார்கள் .
குண்டலினி மூலம் நமது ஜீவனை நம்மால் அடைய முடியும்.

இது எமக்கு தெரிந்த கருத்துகள் .


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த  உள்ளங்களுக்கு ,

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

நாடென்றும் நகரமென்றும் நலந்திகழ் வாழ்வதென்றும்
வீடென்றும் மனையாளேன்றும் மிக்கதோர் மைந்தரென்றும்
மாடன்றுஞ்  சம்பத்தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக் கூடொன்றும் அழிந்தாற் கூடத்தொடருமோ கூறு நெஞ்சே.

 ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் தீதான்
 காட்டிலே எறித்த திங்கள் கானலிற்  சலம்போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாமாலுன்றன்
கூட்டினுலே நாகைநாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே ...

கிட்டுமோ ஞானயோகம்  கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாகலிங்கம் ஏற்றுமோ தீப ஜோதி
தட்டுமோ பளிங்குமேடை தனையரி யார்க்கு நெஞ்சே ...

இறைவன் நம்முள்ளே இருக்கிறான் ....

இந்த சான்று ஒன்றே போதும் என நினைக்கிறேன் ...

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-எண்ணத்தின் வலிமை

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கீழ்காணும் பாடலில் தெளிவான விளக்கங்கள் உள்ளதால்
எமது விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்.


குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டு
குளத்துநீர்க்  குள்ளிரிந்து குறிப்புடன் நினைக்கும்போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்
உளத்திலே நாகை நாதர் உருவறிந்து உணர்வாய் நெஞ்சே .


மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினில் நூலுண்டாக்கி
உருவுடன் கூடுக்கட்டி உகந்ததிலிருக்கு மாபோல்
குருபர னுனது கூட்டில் குடியிருப்பதனைப் பார்த்துப்
பெருவெளி நாகை நாதர் பெருமை கண்டருள் சேர்  நெஞ்சே . 

தண்ணீரிலிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப்பித்திக்
கண்ணினாற் பார்க்கும்போது கயலுருவானாற் போல
நண்ணிய குருவைக்கண்டு  நாதனல் லுருவைச் சேர்த்து
விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளியார் நெஞ்சே.


எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை தான் . உயிர்கள் உருவாகும் விதத்தை உவமையாக கூறிய நமது சித்தர்களை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

பதிநென்மர் சித்தர் பாதம் போற்றி ...
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 8 டிசம்பர், 2011

கார்த்திகை தீபவாழ்த்துகள்...

அன்புள்ள சித்தஉள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 
எனக்கு பணியில் சிறிது இடமாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களை சந்திக்க முடியவில்லை, தினந்தோறும்    காலை 3 மணி நேரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வதும் அதற்குபின் 10 மணி நேரம் அலுவலக
வேலை பார்ப்பதும் ,பின் 3 மணி நேரம் பயணம் செய்து வீட்டுக்கு திரும்ப வேண்டியாகி உள்ளது. 

இருப்பினும் இதுவும் அந்த ஆதி சித்தனின் வேலையாக தான் இருக்கும் . நடப்பது நன்மைக்கே என்ற கோட்பாட்டில் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.

இன்று கார்த்திகை தீபம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த கார்த்திகை தீபவாழ்த்துகள்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல உங்கள் மனதிலும் ஆன்ம ஜோதியை ஏற்றுங்கள் . இறையருள் பெறுங்கள் .

நெஞ்சறி விளக்கம் -10

வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கொளி எங்கே போச்சு
கூட்டினுள் நடஞ்செய் ஈசன் குறிப்பறியாமல் நீதான்
நாட்டினுள் அலைந்தால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே ..


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 22 நவம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் 1 -5

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
     
கணபதி தாசர் அருளிச்செய்த  நெஞ்சறி விளக்கம் 1 -5 

விநாயகர் காப்பு

வஞ்சக மனத்தினாசை மாற்றிய பெரியோர் தாளில்
கஞ்சமா மலரிட் டோதுங் கணபதி தாசன் அன்பால்
நெஞ்சறி விளக்க ஞான நீதிநூல் நூரும்பாடக்
குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்ப தாமே .

பாடல் : 1
பூமியிற் சவுந்தர ப்பெண் புணர்ந்திடு நாகை நாதர்
நாமெந்  நாளும் நாவினவின்று செந் தமிழாற் பாடிக்
காமமு மாசா பாசக் கன்ம முமகற்றி மூல
ஓமெனு மெழுத்தை ந்தாலே யுனையறிந்துணர்வாய் நெஞ்சே..

பாடல்: 2 
தந்தை தாய் நிசமுமல்ல சனங்களும் நிசமுமல்ல
மைந்தரும் நிசமுமல்ல மனைவியும் நிசமுமல்ல
இந்தமெய் நிசமுமல்ல இல்லறம் நிசமுமல்ல
சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே..

பாடல் :3 
காண்பது மழிந்துபோகும் காயமு மழிந்துபோகும்
ஊண்பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்மணி நாகை நாதர் பொற்பாதம் அழியாதென்று
வீண்பொழு தினைப்போக்காமல்  வெளிதனில் ஒளிபார் நெஞ்சே.

பாடல் :4 
மனமெனும் பேயினாலே மாய்கையாம் இருடான் மூடச்
சனமெனும் ஆசா பாசந் தலைமிசை ஏற்றிக் கொண்டு
கனமெனுஞ் சுமையைத் தூக்கிக் கவலையுற்றிட்டாய் நீயும்
பனமெனும் நாகை நாதர் பதம்பணிந் தருள்சேர் நெஞ்சே ..

பாடல் : 5 

இருவினைப் பகுதியாலே எடுத்திந்தத் தேகந்தன்னை
மருவிய நானான் என்று  மாயையில் அழிந்தாய் நீதான்
குருவினாற் குறியைப்பார்த்துக்  குண்டலி வழியே சென்றங்கு
உருவினால் நாகை நாதர் உண்மையை  உணர்வாய் நெஞ்சே ..


விளக்கம் :

ஓமெனும் எழுத்துடன் ஐந்தெழுத்து மந்திரத்தை சேர்த்து செந்தமிழால் தினந்தோறும்
மனதில் தோன்றும் ஆசாபாசங்களையும் காமத்தையும் கன்மத்தையும் அகற்றி நாகை நாதரின்
பாதத்தை நெஞ்சினால் உணர்ந்து அவர் பாதம் சரணடையவேண்டும் .

இவ்வுலகில் நிலையானவர் யாரென்று இரண்டாம் பாடலில் கூறியுள்ளார் . நம்மை ஈன்ற பெற்றோர்களும் ஒரு நாள் இறந்து போவார்கள் , நாம் ஈன்ற மக்களும் ஒரு நாள் அழிந்து போவார்கள் . நம்முடன் வாழ்ந்து நமது வம்சத்தை விருத்தி செய்யும் மனைவியும் ,ஏன் நமது இந்த உடலும் கூட ஒரு நாள் அழிந்து போகும்  ஆனால் நாகை நாதரின் துணை ஒரு நாளும்
அழிந்துபோகாது  என்று கூறுகிறார்.  இது உண்மையும் கூட நமது சித்தர்கள் கட்டிய கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்க தான் செய்கிறது.

தொடரும் .....
     

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 21 நவம்பர், 2011

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி விளக்கம்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி  விளக்கம்....

இந்த சித்தரைப்பற்றிய வாழ்க்கை விபரம் ஒன்றும் எனக்கு தெரியாது . இருப்பினும் இவர் நாகை நாதரின் மீது அளவு கடந்த பக்தி கொண்டுள்ளதாக பாடல்இயற்றப்பட்டுள்ளது . இதன் மூலம் இவர் நாகை  அருகே வசித்து இருக்கலாம் என நான் கருதுகிறேன் .  இவரைப்பற்றிய விபரம் எவருக்காவது தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .

இவர் எழுதிய நெஞ்சறி விளக்கம் 100  பாடல்களை படிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பின்வரும் பாடல் மூலம் நம்மால் காணமுடிகிறது.

நூற்பயன் :

கதிதரும்மூலா  தாரக் கணபதி தாசன் சொன்ன
நிதிமணி மாலை யான நெஞ்சறி விளக்கம் நூறும்
துதிசெயும்  அறிவோர் ஞான சோதியின் வடிவமாக
மதியணி நாகை நாதர் மலர்ப்பாதம் பெற்று வாழ்வார் .

நித்தியப் பொருள தான நெஞ்சறி விளக்கம் நூறும்
பத்தியாப் மனத்தில் எண்ணிப் படித்ததன் பயன் காண்போர்கள்
முத்தி மெய்ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்
சத்தியுஞ் சிவமுந் தோன்றுந் தற்பர மதனுட் சார்வார்

கனகமார் மணிசேர் மூல கணபதி தாசனாக
நினைவினா லறிகட்செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்
வினவியே படிப்போர் கேட்போர் வினையெல்லாம்  அகன்று மெய்யுற்
பணமெனும்   மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பதத்துள் வாழ்வார் .


வரும் நாட்களில் அவர் இயற்றிய நூறு பாடல்களில் சிலவற்றை நாம் காணலாம்.

  http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 27 அக்டோபர், 2011

பதினெண்பேரை காணும் மந்திரம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
    
"பதினெண்பேரை காணும் மந்திரம்" என்றதும் நமக்கு ஞாபகம் வருவது நமது பதினெட்டு சித்தர்களை தான் அதில் நமக்கு எந்தளவும் சந்தேகம் இல்லை.  இருப்பினும் இந்த பதினெட்டு என்பதில் பலவித கருத்துகள் உள்ளன.  இவற்றை கடந்தவர்கள் தான் சித்தர்கள் என்று ஒரு சாரர் கூறுவார். ஆகையால் தான் ஐயப்பசுவாமிக்கு பதினெட்டு படிகள் அமைத்தனர் . இந்த பதினெட்டு படியின் தன்மையை உணர்ந்தால் தான் ஐயப்ப சுவாமி போல் மரணமில்லா பெருவாழ்வை நம்மால் அடையமுடியும் என்ற தத்துவத்தை தான் நமது மூதாதையார்கள் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் அதனை உணர்ந்தவர்கள் வெகு சிலரே இவ்வுலகில் உள்ளனர்.

தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போதம் பின்வருமாறு கூறுகிறது.

நிஜானந்த போதம் : 41 

செய்ததமிழ் தனையறிந்து  பதினெண் பேரைச்
   செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
   சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
   வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான்  வசமாய்க் கண்டால்
   உத்தமனே சகலசித்துக் குதவியாமே...


"ஓம் சிங்ரங் அங்சிங் " -என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .

முயற்சித்து பார்ப்போம் சித்தர்களை காண. ....

 
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 26 அக்டோபர், 2011

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

இத்திருநாளில் மனதில் உள்ள  அனைத்து தீய எண்ணங்களையும் சுட்டெரித்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் ஒரு இனிய வாழ்க்கையை தொடருங்கள் .

உங்களால் மனதில் உள்ள தீய எண்ணங்களை குறைக்கமுடியவில்லைஎன்றால் பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை இத்திருநாளில் சரணடையுங்கள் .

குரு யாரென்று தெரியாதவர்களுக்கும் ஆன்மிகம் என்றால் என்ன என்று தெரிய விரும்புவர்களும் சற்குரு அகத்தியரின் பாதங்களை சரணடையுங்கள் .

அவரை அடைய விரும்பும் உள்ளங்கள் கீழ்வரும் மந்திரங்களை கூறலாம் .

சத்தியமே அகத்தியம் ,அகத்தியமே சத்தியம் .

ஓம் அகத்தியரே போற்றி ஓம் .

ஓம் குருமுனியே போற்றி ஓம்

குருநாதரின் காயத்ரி மந்திரம் ..

ஓம் தத்புகுஷ்யா வித்மஹே
லோபமுத்ரா சமேதாயே தீமஹி
தன்னோ அகஸ்திய ப்ரோசோத்யாத்..

ஓம் அகத்தீசாய வித்மஹே
பொதிகை சஞ்சார தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரோசோத்யாத்.


மேற்கண்ட மந்திரங்களை தினந்தோறும் 108 முறை காலையும் ,மாலையும்  செபிப்பவர்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளி தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  இது அனுபவ வாக்காகும்.

கடந்த பதிவில் கூறிய கதவு என்பது லலாட கதவாகும். வாசி பயிற்சியை கொண்டு அந்த கதவினை திறந்தால் மரணமில்லா பெருவாழ்க்கையை நம்மால்  அடைய முடியும் என்பது சித்தர்களின் கூற்றாகும் . இதனைப்பற்றி காகபுசண்டர் தமது பெருநூல் காவியம் -1000 த்தில் வெகு தெளிவாக கூறியுள்ளார்.


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 20 அக்டோபர், 2011

குரு என்பவர் யார் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

குரு என்பவர் யார் ? என்ற கேள்வியை பார்க்கும்போதே எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு தெரிந்த கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யாரையும் நாம்  தரக்குறைவாக  பேசக்கூடாது . ஏனென்றால் நமக்கு தெரிந்த விசயங்களை விட நமக்கு தெரியாத விஷயங்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளது.

இதை தான் அவ்வை அம்மையாரும் அழகாக கூறுவார் //கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு //.

பொதுவாக நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்று கூறுவார்கள் . இதற்க்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறுவார்கள் .  நதி என்பது மலைகளில் தோன்றி பல நாடு நகரங்களை வளம் கொழிக்க வைத்துவிட்டு இறுதியில் கடலில் கலக்கிறது.
மலையில் அதன் குணம் மூலிகை நிறைந்ததாக இருக்கும் . நகரங்களில் அது மாசுப்பட்டு இருக்கும் இறுதியில் எப்படி இருக்கும் என்பதை நம்மால்  கணிக்க முடியாது.

இதனை ஏன் ரிஷிகளுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள் என்று பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக தான் இருக்க செய்கிறது .   ஒருவன் எப்படி வாழ்ந்தான் ?எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் ? எப்படி வாழ்வான் ? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலே போதும் ரிஷி என்பது என்னவென்று புரியும் .

நதி -பாரபட்சமின்றி எல்லா இடத்தில் பாய்ந்து அனைவரையும் வாழ வைக்கும்.
ரிஷி -பாரபட்சமின்றி எல்லா மக்களையும் நேசித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்.

இவ்வுலகில் எல்லாரும் கூறும் மந்திரம் ...

       மாதா பிதா குரு தெய்வம்.- இதனை எந்த மதத்தினாராலும் மறுக்க முடியாது.

மாதா -இவ்வுலகில் நம்மை முதலில் அறிமுக படுத்துபவள் .
பிதா  -இவ்வுலகில் நமக்கு வெளியுலக வாழ்க்கையை அறிமுக படுத்துபவர் .
குரு   -இவ்வுலகில் தெய்வம்/வாழ்க்கை  என்ற தத்துவத்தை விளக்குபவர் .
தெய்வம் - குருவின் அருளோடும் துணையோடும் தெய்வத்துடன் ஒன்றி போதல் .

//ஒன்றும் இல்லாத பரவெளியே தெய்வம்//

ஆகையால் தான் இவ்வுலகில் பிறக்கும் எல்லாரும்  முதலில் அம்மா என்றும் பின் அப்பா என்றும் கூறி பிற்காலத்தில் படிக்கும் காலத்தில் ஐயா என்று வணங்கி இறுதியில் சிவசிவ என்றோ கோவிந்தா என்றோ வாழ்க்கை முடித்து கொள்கிறோம்.
அம்மா -> அப்பா -> ஐயா ->இறைவா
மேற்கூறியதில் ஒன்று குறைந்தாலும் கூட நமக்கு சிக்கல் தான் .

நமது வாழ்க்கை எப்படி ஒத்து போகிறது என்று நீங்களே பாருங்கள் . இதில் இடையில் வரும் "குரு " என்பது தான் பிரச்சனையே . எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பது என்பது தான் மதி.

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை நினைத்து பெற்றோர்கள் அஞ்சுவார்கள் ஏனென்றால் ரெண்டாம்கெட்ட வயசு என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று .  அதுபோல தான் குருவை தேர்ந்து எடுப்பதிலும் நமக்கு நிறைய பயம். என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்று எந்த செய்தித்தாளை எடுத்தாலும் போலி சாமியார்கள் கைது , கற்பழிப்பு வழக்கு , கொலை வழக்கு போன்ற செய்திகள் தான் நமது கண்களில் படுகிறது.  அப்படி இருக்க எப்படி உண்மையான குருவினை எப்படி  கண்டுபிடிப்பது ? ரொம்ப கஷ்டமான கேள்வி .

"கதவை திற காற்று வரட்டும் "- என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உண்டு. இதில் எந்த கதவு என்பது தான் பிரச்சனையே !. ஆக மொத்தம் கதவை திறக்க வேண்டும்.

நாளை திறக்கலாம் ...


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 19 அக்டோபர், 2011

தமிழ் மந்திரங்களின் தொடர்ச்சி...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

தமிழ் மந்திரங்களின்  தொடர்ச்சி..

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்)  சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார். 

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.


உதாரணமாக :
முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..
 "ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் . 
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்

ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்.

பிருகு முனிவரின் அருள்(உங்களுக்கு ) இருந்தால் மேற்கூறிய மந்திரங்களை  உச்சரித்து
பலன்களை பெறவேண்டுகிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 17 அக்டோபர், 2011

தமிழ் மந்திரங்களை உச்சரிக்கும் முறை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மந்திரத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய என்னால் பதிவுலகத்தை பற்றிய 
சிந்தனை கூட வரமுடியாத  அளவுக்கு ஆகிவிட்டது. 

தமிழ் மந்திரங்களை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியபோது  எமது வர்மானிய  நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது . அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் மந்திரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்து  கொண்டேன். பிறகு உரையாடி கொண்டு இருக்கும் போது தமிழில் உள்ள மந்திரங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று வினவினேன் . 

அவர் சித்தர்கள் காட்டிய வழியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் .  அவர் சிரித்து கொண்டு தமிழ் மொழியை  தெரிந்து கொண்டவனுக்கு இறப்பு என்பதே கிடையாது என்று கூறினார்.  இதை என்னால் நம்ப முடியவில்லை . இருப்பினும்   நான் அனுமார் மந்திரம் ஒன்றினை ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பதாக அவரிடம்  கூறினேன்.   என்னை பொறுத்த வரை அவர்க்கு எந்த மந்திரமும் தெரியாது என்ற எண்ணத்தில் கூறினேன் . அவர் என்னை பார்த்து அந்த மந்திரத்தை கூறும்படி சொன்னார் . 

நான் அந்த மந்திரத்தை சொல்ல  ஆரம்பித்தேன் அவ்வளவு தான் அதற்குள் அவரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு  பட பட வென்று  அந்த மந்திரத்தை கூறிவிட்டு அதனை உச்சரிக்கு்ம் முறையையும் அதன் பலனையும் கூறினார் .
என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை . 

ஒரு வாரம் காலமாக நான்  அதைப்பற்றி சிந்தனையில் இருந்து கடைசியில் ஒரு கிறித்துவர்  மூலமாக அதன்  உட்கருத்தை தெரிந்து கொண்ட போது சித்தர்களின் வல்லமையை நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது. 

அவர் சித்தர்களை பற்றி கூறும்போது
 " மனிதர்களுக்காக என்றும் வாழ்ந்த கொண்டு இருப்பவர்கள் "" -
"மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ", 
"சாதி மதங்களை வெறுத்தவர்கள் ",
"புற சடங்குகளை ஒதுக்குபவர்கள் (மூடநம்பிக்கைகள் ) 
 என்று "சொல்லி எங்களை ஆச்சர்ய்படுத்தினார் . 
இன்றும் நோயால் வாடும் பல மக்களுக்கு மூலிகை வைத்தியத்தை இலவசமாக செய்து வருகிறார். 
 குறிப்பாக புற்று நோயால் வாடும் மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை அளித்து வருகிறார்.  

பிறகு என் மந்திர ஆராய்ச்சியை சொன்ன போது தமிழ் மொழியை உச்சரிக்க கற்று கொள் என்று கூறி சில மந்திரங்களை கூறினார். அவர் கூறிய மந்திரங்களும் பிருகு முனிவர் கூறிய மந்திரங்களும் ஒன்று போய் இருந்தது .

அவற்றில் சில  உங்களுக்காக..

பிருகு முனிவர் பாடல் : 41 

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
     பகடில்லை  ஆகாரம் பின்னே நாட்டே 
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே 
    செயமான ஈகாரம் உகாரம் கேளு  

மாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று 
    மகிமையுள்ள  ஔம் தனிலே முடித்துப்போடு 
காரப்பா பீசமிவை பதினொன்றாகும் 
   கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

இதற்க்கான விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 22 செப்டம்பர், 2011

மந்திரத்தைப்பற்றி ஒரு அலசல் ,

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

மந்திரம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பொருள் கூறுவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. இருப்பினும் என் சிற்றறிவுக்கு எட்டியதை இங்கு பகிர்கிறேன்.

என் குருநாதர் அகத்தியர் சொல்கிறார் .

  "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் . "

இந்த வரிகளை பார்க்கும் போது நமக்கு எதுக்கு வம்பு என்று மந்திரம் செபிக்காமல்  ஒதுங்கி கொள்வதும் உண்டு. ஏனென்றால் மனம் எங்கே இருக்கிறது என்பதை சொல்வதற்கு யாருமில்லை அப்படி இருந்தாலும் அந்த மனதை செம்மையாக எப்படி வைத்து கொள்வது என்பதற்கான பயிற்சி முறையை யார் தான் நமக்கு கற்றுகொடுப்பார் என்ற எண்ணமும் என் மனதில் ஏற்பட்டதுண்டு .

ஆகையால் முதலில் மனம் என்ற சொல்லை ஆராய்ந்து  பின்   மந்திரத்தை பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன்.  மற்றும் பொருள் தெரியாமல் கூறும் மந்திரத்தால் பயன் எதுவும் இல்லை என்ற எண்ணத்தினால் பொதுவாக சமஸ்க்ருத மொழியில் உள்ள மந்திரங்களை நான் படிப்பதும் இல்லை உபயோகிப்பதும் இல்லை .ஏனெனில் மந்திரங்களை தவறாக கூறினால் அதற்க்குண்டான விளக்கம் மாறி நாம் கூறும் மந்திரம் நமக்கே திரும்பி வந்து விடும் என்ற எண்ணமும் எனக்கு  உண்டு.( சமஸ்க்ருத மொழிக்கு எதிரிகள் நாங்கள் அல்ல .ஏனென்றால் அதன் பலன் ,சூட்சமம் ,அதனை உச்சரிக்கும்  முறை  போன்றவற்றை   எல்லாருக்கும் கிடைக்காமல் சிலர் செய்துவிட்டார்கள் )

மந்திரங்களை செபித்தால் ஏற்படும் பலன்கள்  மிக அதிகம் என்று பல நூல்களில் நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள் . அப்படி இருக்க நமது ஆலயங்களில் தினந்தோறும் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் அனைத்துவித பலன்களையும் பெற்றவர்களாக தானே இருக்கவேண்டும்.  அதற்கு மாறாக அவர்களும் நம்மை போலவே தான் வாழ்ந்து வறுமையில் உழல்கிறார்கள்.

பொதுவாக சிவன் கோவில் அர்ச்சகரை பார்த்தாலே தெரியும் அவருடைய உடலில் உள்ள எலும்புகள் தெரியும் அளவிருக்கு ஒல்லியாக இருப்பார்கள் . இதருக்கு மாறாக பெருமாள் கோவில் உள்ள அர்ச்சகரை பார்த்தால் நன்று  வாட்ட சாட்டமாக கழுத்தில் தங்க நகை தொங்கும் அளவிருக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள்(பொதுவாக) .

இதற்க்கு காரணம் என்ன ? என்று வினவினால் பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது.   இதற்க்கு மந்திரமும் ஒரு காரணமாக இருக்கலமா என்ற எண்ணமும் எனக்கு தோன்றுகிறது .

சிவனை கும்பிட்டால் முதலில்  ஞானம் கிடைக்கும் பின் சித்தி அதற்குபின் முக்தி கிடைக்கும். ,
பெருமாளை கும்பிட்டால் பொன்னும் பொருளும் கிடைக்கும் பின் முக்தி கிடைக்கும்.
ஆக மந்திரங்கள் மனிதனின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திருக்கு
நாம் வந்து தான் ஆகவேண்டும்.

அன்பு சித்தரை( இயேசு கிறிஸ்து ) வழிபடும் மக்களும் எல்லா நன்மைகளையும் பெற்று நன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள் . நமது தமிழகத்தில் உள்ள எல்லா தேவாலயங்களிலும் அழகான தமிழ் மொழியிலே தான் திருப்பலியை அவர்கள் நடத்துகிறார்கள் .

"அல்லா' -வை வழிபடும் முகமதிய மக்களும் சீரும் சிறப்பாக தான் வாழ்ந்து வருகிறார்கள் .
அப்படி இருக்க மந்திரங்கள் எப்படி அவர்களுக்கு உதவி செய்யும்.  அவர்கள் உருது மொழியில் அல்லவா இறைவனை வழிபடுகிறார்கள் .

உலகில் கடவுள் என்றால் என்ன என்று தெரியாத மக்களும் பல நாடுகளில்(ஆப்ரிக்க) வாழ்ந்து வருகிறார்கள் . அப்படி இருக்க மந்திரங்களை நாம் எப்படி கண்டு பிடித்தோம் ,யார் கண்டு பிடித்தார்கள் என்ற விபரமும் நம்மிடம் இல்லை(அதிகாரபூர்வமாக ).

இதன் மூலம் இறைவனை அடைவதற்கு பல மொழிகளில் பல வகையான மந்திரங்கள் உள்ளது என்ற முடிவிற்கு நம்மால் வர முடிகிறது. 

நமக்கு தெரிந்த தாய் மொழியில் இறைவனை வழிப்பட்டால் போதும் என்ற எண்ணத்திற்கு  நான் வந்து விட்டேன். 

இருப்பினும் சித்தர்களின் பார்வையில் இந்த கருத்தை எடுத்து வைப்பது கொஞ்சம் கடினம் தான்.

மந்திரங்களினால் பயன் ஏதும் இல்லை என்று கூறும் சித்தர்களே பலவகையான மந்திரங்களை எழுதி அதன் பயன்களையும் நமக்கு விளக்கி உள்ளார்கள் .


அலசல் தொடரும்....

என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 21 செப்டம்பர், 2011

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? என்று பிருகு முனிவர் பின்வருமாறு கூறுகிறார் .

பாடல் : 39 

ஆச்சப்பா இதைவென்றால் ஞானங் கூடும்
    அல்லாட்டால்  தேறுதருக்கு ஏது மார்க்கங்
காச்சப்பா கோபத்தை ஞானத்தீயால்
    கண்மணியே என்போலே  யார்தான் சொல்வார்
போச்சப்பா பிறவிதான் ஞானம் நின்றால்
     பொல்லாத பிறப்பிறப்பு மழிந்து போகும்
பாச்சப்பா மனந் தன்னை மந்திரத்தில்
    பகடில்லா சித்தி பெற்றால் தெளிவுண்டாமே !

விளக்கம் :
                    காமமும், கோபமும், மிகுந்த போகமும் மனிதனை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் . காமத்தையும் ,கோபத்தையும் வென்றால் ஞானமுண்டாகும் .
ஞானம் பெற்றால் பிறப்பும் ,இறப்பும்  அகலும் . எனவே காமத்தையும் கோபத்தையும் ஞானம் என்ற தீயால் சுட்டு அழித்துவிடு என்று கூறுகிறார் .

எப்படி இந்த காமத்தையும் கோபத்தையும் மனதில் இருந்து அழிப்பது என்று நீ கேட்பாயாகில் அதற்க்கான விளக்கத்தையும் ,மந்திர முறைகளையும் உனக்கு சொல்கிறேன்.  அதன் மூலம் நீ சித்தியும் முத்தியும் அடையலாம்  என்று சீடனுக்கு கூறுவதாக கூறுகிறார்.

தாம் கூற இருக்கும் மந்திரங்களை சொல்வதினால் நமக்கு கிடைக்கும் பயன்களை பின்வருமாறு கூறுகிறார் .

சகல சித்திகளும் கிடைக்கும் என்றும் ,
சரிரத்தில் திவ்வியமான ஒருவித ஒளிவுன்டாகும் என்றும்,
கர்ம வினைகளும் ,சூனியமும் ,ஏவல் , பிசாசு ,துர்தேவதைகள் போன்றவை மந்திரத்தை செபித்த மாத்திரத்திலே விலகி ஓடும் என்றும் ,
வேதாந்த பொருளான பரம்பொருள் நம் முன்னே பிரகாசிக்கும் என்றும் கூறுகிறார்.

அவர் கூற இருக்கும் மந்திரங்களை  நாளைய பதிவில் காணலாம்( உத்தரவு இருப்பின் ).


 என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பொய் மாந்திரிகர்களின் குணம் ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பிருகு முனிவரின் மாந்திரிகம்  பாடல்களில்  பொய்  மாந்திரிகர்களின் குணம் ...

பொய் மாந்திரிகர்களின் இன்றைய நிலையை பின்வருமாறு கூறுகிறார்.

ஒணங்காத மாந்திரிகர் உலகில் மெத்த
     மகிதலமும் என்வசமே என்று சொல்லுவார்
கணங்களெல்லாம் எந்தனுக்கு சித்தியென்பார்
    கண்ணதில்  கண்டோமோ தெய்வமென்பார்
குணமான சக்கரத்தின் மாறல் எல்லாம்
    குறிக்கண்டு மாறவல்லோம் என்று சொல்லுவார்
இணங்காதே  கோடி கோடி யுறுவே செய்தோம்
    என்றெல்லாம் எடுத்துரைப்பார் மட்டிமாடே .


விளக்கம் : 
     நல்ல மாந்திரிகரைகாட்டிலும் பொய் மாந்திரிகர்கள் உலகில் அநேகம் உள்ளனர்கள்.
இவர்கள் கூறும் வார்த்தை ஜாலங்களால் மக்கள் மதி மயங்கி அவர்களிடம் எல்லாத்தையும் இழக்கிறார்கள் .

ஈரேழு புவனங்களும் என் வசம் என்றும், சகல பூதகணங்களும்  என்வசம் என்றும் கூறுவார்.
அணைத்து பூதங்களுக்கும் தலைவனாக உள்ள தெய்வங்களை கண்டு அவர்களிடம் உரையாடினோம் என்றும் கூறுவார்.  அது மட்டுமல்லாமல் சூரிய ,சந்திரிய ரகசியங்களைய அறிவோம் என்றும், பல கோடி முறை மந்திரங்களை உச்சாடனம் செய்து சக்தி வைத்துள்ளோம்
என்றும் கூறுவார்.


தொடரும்...


என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 7 செப்டம்பர், 2011

மதிப்பிற்குரிய ஐயா கணபதி ஸ்தபதி சிவனடி சேர்தல் ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

 கணபதி ஸ்தபதி


பிரபல சிற்பக்கலை நிபுணர் மதிப்பிற்குரிய ஐயா கணபதி ஸ்தபதி அவர்கள் சிவனடி சேர்ந்ததை
மிகுந்த  ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அவர் கட்டிய கோவில்கள் பல , அவர் வாங்கிய பட்டங்கள் பல (பத்மபூஷன் உள்பட)

அவரின் கைப்பாட்டில் விளைந்தவைகளில் சில இங்கே தரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி- திருவள்ளுவர் சிலை .
தஞ்சாவூர் -தமிழ் பல்கலைகழகம் .
சென்னை -திருவள்ளுவர் கோட்டம் .
அமெரிக்கா -இலியானாஸ் -ஸ்ரீ ராமர் கோவில் .
பிஜி தீவுகள் -ஸ்ரீ முருகன் கோவில்.
ஹவாய் தீவுகள் -இறைவன் கோவில் .
பூம்புகார் - மாதவி சிலை(சிலப்பதிகாரம் )

இன்னும் பல இடங்கள் உள்ளன ..

English:

The following source taken from the http://www.aumscience.com/content/shilpi_guru.html.

V. Ganapati Sthapati is a Sthapati head of the "College of Architecture & Sculpture" in the Vastu Shastra tradition ascribed to the mythical sage Mamuni Mayan.
He was born in 1927 to sculptor Sri Vaidyanatha Sthapati and Smt. Velammal at Pillayarpatti a village near Karaikudi, Tamil Nadu, India in a Vishwabrahmin family (a Hindu hereditary caste of artisans and architects). His family tradition claims descent from the architects who created the Brihadeeswara Temple of Tanjore TN, India.
Sthapati attended Dr. Alagappa Chettiar College, Karaikudi and graduated in mathematics. After his graduation he became a Sthapati (Hindu traditional architect) at Palani Murugan Temple, Palani, TN, India. He resigned the same after the demise of his father who served as principal (1957 to 1960) of ‘The School of Architecture and Sculpture’ at Mamallapuram. He succeeded his father as the Principal of the Government College of Architecture and Sculpture, TN, India.
From the 1980s, Sthapati campaigned to restore and elevate the status of traditional Hindu architecture in modern Indian society by affiliating courses to the University of Madras and offering degree courses, bringing about a revival of Vastu Shastra.
After retirement from government service, he established "Vaastu Vedic Trust" and "Vaastu Vedic Research Foundation" aimed at research, development and globalization of Vaastu Shastra. He is also the head of the professional guild named "V. Ganapati Sthapati & Associates".
Sthapati served as architect for several buildings and sculptures, including the following:
  • Sculpture of Tamil poet and saint Thiruvalluvar - Thiruvalluvar Statue at the southern tip of India at Kanyakumari, TN, India (measuring 133’- 40.5 m in elevation).
  • Design and Construction of huge sized University buildings including the Administrative block and library for Tamil University in Tanjore.
  • Design and Construction of Valluvar Kottam in Chennai, TN, India.
  • The Rajagopuram of Sri Ramar Temple and Sri Ganesh Shiva Durga Temple at The Hindu Temple of Greater Chicago complex Lemont, Illinois, USA[
  • Sri Murugan Temple, Nadi-Fiji islands.
  • The San Marga Iraivan Temple, Kauai, Hawaii.
  • Granite sculpture of the Madhavi - heroine of the Tamil epic Silappathikaram, erected in an Art Gallery in Poompuhar, Chennai, TN, India.
  • Projects in India and other countries.
Among these the palatial buildings of library and administrative block for Tamil University of Tanjore and the Muthiah Mandram in Madurai speak of his capacity for designing and executing works of stupendous nature. Of particular interest is his monumental vaastu the sculpture of Tamil poet and saint Thiruvalluvar - Thiruvalluvar Statue at the southern tip of India at Kanyakumari, TN, measuring 133 feet (40.5 m) in elevation. This colossal marvel has taken him to the pinnacle of his life’s achievement as a traditional architect and builder and commendations and awards have reached him from around the world for this achievement: a poetic image that will be with us for thousands of years.
He has authored a number of books on the science and technology of Vastu Shastra and has conducted numerous seminars with professionals in a generous effort to make this knowledge available to the world. He has established the International Institute of Mayonic Science and Technology, which conducts workshops and discourses all over the world. Some of the notable books he has authored include: Iconometry, Temples of Space Science, The Building Architecture of Sthapatya Veda, and Commentary on Mayan’s Aintiram.
Sthapati has earned a number of titles and awards including Padma Bhushan[8], an Honorary Fellowship by the Indian Institute of Architects, the National award for Master Craftsmanship by the President of India, the title of "Shilpi Guru of India" also by the President and a Doctorate Degree conferred by the Maharishi Mahesh Yogi Vedic University. - source http://en.wikipedia.org/wiki/Dr._V._Ganapati_Sthapati


என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

இமயமலை யாத்திரையின் முதல் நாள் அனுபவம் தொடர்ச்சி ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

 நேற்றைய தொடர்ச்சி ,
     சரியாக மாலை 6 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தபோது ,எதுக்கும் செல்வராஜ் அன்பர்க்கு தொடர்ப்பு கொண்டு பார்ப்போம் என்று எண்ணி அவரை தொடர்பு கொண்டேன்.

அவர் கூலாக ஒரு பதில் சொன்னார் ,தம்பி பொறுமையாக வாங்க நம்ம புரோக்ராம் மாற்றம் அடைந்துள்ளது என்று சொன்னார்.
 எனக்கு ஒன்றும் புரியவில்லை .  என்ன சொல்றிங்க என்ற கேட்டபோது 
"காத்கோடம்" போற வழியில பாலம் ஒன்று உடைஞ்சி போச்சி , அதனால நாம் ஹரித்வார் போயிட்டு அப்புறமா பாபாஜி குகைக்கு போகலாம் என்று சொன்னார் .

எங்களுடைய ரயில் டிக்கெட் வைட்டிங் லிஸ்ட் 5  ஆக இருந்தது  . எனக்கு ஒரு சந்தேகம் எப்படியும் நம்ம டிக்கெட் உறுதியாகி விடும், கேன்ஸல் பண்ணினாலும் பணம் ஒன்னும் கிடைக்காது என்று நினைத்துகொண்டு , என் நண்பனுக்கு போன் பண்ணி எங்களுடைய டிக்கெட்டை கேன்சல் பண்ண சொன்னோம். அவனும் உடனே செய்ததால் எங்களுக்கு முழு பணமும் கிடைத்து. இல்லையென்றால் ஒரு சிறிய தொகையை நாங்கள் இழக்க வேண்டியதாக இருக்கும்.  பாபாஜியின் அருளினால் இந்த ஒரு நிகழ்வு நடந்தது.

நாங்கள் டெல்லியில் இறங்கி சரியாக 10 :30 மணிக்கு பழைய ரயில் நிலையத்திருக்கு சென்று எங்கள் குழுவினரை சந்தித்து எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ...

எதுவும் நம் கையில் இல்லை ,
டிக்கெட் கன்பார்ம் ஆகனும் என்று வேண்டிய எனது மனம் இந்த நிகழ்வுக்கு பிறகு எப்படியாவது  டிக்கெட்டை கேன்ஸல்  பண்ணனும் என்று வேண்டி கொண்டதை நினைத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

விதிப்படி பயணம் என்பது எவ்வளவு ஆழ்ந்த கருத்து என்பதை இதன்மூலம்  நான் உணர்ந்தேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 5 செப்டம்பர், 2011

இமயமலை யாத்திரையின் முதல் நாள் அனுபவம் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

  இமயமலையில் நடைபெற்ற அனுபவங்களை தொகுத்து எழுத நினைக்கும்போதெல்லாம் ஏதோ ஒருமாதிரியாக இருக்கிறது . 

எங்களுடைய யாத்திரை பல வித மாறுதலுக்கு உட்பட்டு இருந்தது (கடைசி நேரம்வரையில்)  . எங்களுடைய குழுவின் திட்டம் முதலில்  ஹரித்வார் சென்றுவிட்டு பிறகு பாபாஜி குகைக்கு செல்வதாக மட்டும் தான்இருந்தது.

செல்வராஜ் என்ற ஆன்மிக நண்பரின் ஆலோசனையின் பெயரில் ,
முதலில்  ரயில் மூலம் "காத்கோடம்" சென்றுவிட்டு பின் "நைனிட்டால்" சுற்றி பார்த்துவிட்டு பிறகு பாபாஜி குகைக்கு செல்லலாம் வரும்போது  ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷை
 சுற்றிப்பார்க்கலாம் என்று கூறினார்.  இதன் மூலம் நமக்கு இரண்டு நாட்கள் மிச்சம், அந்த இரண்டுநாட்களில் நாம் பத்ரிநாத் சென்று தரிசனம் செய்து வரலாம் என்று கூறினார் .  
எல்லார்க்கும் ஒரே சந்தோசம் ஏனெனில் ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள் போல  இருந்தது .


ஆனால் இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால்  நாங்கள் பதிவு  செய்த விமானம் இரவு 9 :30   மணிக்கு தான் டெல்லி வந்தடையும் . ராணிக்கெட் எக்ஸ்பிரஸ்   ரயிலோ இரவு 10 :40 மணிக்கு பழைய டெல்லியில் இருந்து புறப்பட்டுவிடும் .  இது சாத்தியமா என்று எங்களுக்கு தெரியவில்லை இருப்பினும் பாபாஜியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நாங்கள் சரி என்று ஒப்புகொண்டோம் . பின் எங்களுக்கு ரயில் டிக்கெட் எடுத்து தருவதாக சொல்லி எங்கள் விபரங்களை வாங்கிக்கொண்டார் .

நான், என் மனைவி மற்றும் என் குழந்தை  மற்றும் என் நண்பர்கள் இரண்டு பேர் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் பிரயாணம் பண்ணவேண்டியதாக இருந்தது.
நாங்கள் புறப்படவேண்டிய நாள் 19 ந் தேதி வெள்ளிகிழமை ஆகையால் புதன் கிழமை தக்கால் மூலம் டிக்கெட் எடுத்து தருவதாக சொன்னவரிடம் இருந்து எந்தவொரு பதிலும் வியாழகிழமை வரை வரவில்லை.

எனக்கு ஒரே சந்தேகம் இன்னும் எந்தவொரு பதிலும் செல்வராஜ் அன்பரிடம் வரவில்லையென்று . பிறகு அவரை தொடர்பு கொண்டபோது "வைட்டிங் லிஸ்ட் " தான் இருந்தது அதனால் நான் புக்கிங் பண்ணலப்பா என்று கூலாக ஒரு பதில் இருந்தது .
என்னடா சோதனை என்று மனம் நொந்து நான் தக்கால் மூலம் வியாழக்கிழமை அன்று எங்கள் குழுவினர் எல்லாருக்கும் சேர்த்து டிக்கெட்  புக்கிங் பண்ணிவிட்டேன்.  அப்போது வைட்டிங் லிஸ்ட் 80 ஆக இருந்தது. 

வெள்ளிகிழமை அன்று காலை வைட்டிங் லிஸ்ட் 50 ஆக இருந்தது . எனக்கு ஒரே சந்தோசம் எப்படியும் நமக்கு டிக்கெட் உறுதியாகிவிடும் என்று. நாங்கள் விமான நிலையத்திருக்கு புறப்படும்போது வைட்டிங் லிஸ்ட்  15 ஆக இருந்தது. எப்படியோ நமக்கு டிக்கெட் உறுதியாகிவிடும் அதற்க்கு பின் எப்படி நாம் ராணிகேட் எக்ஸ்பிரஸ்-யை பிடிப்பது என்ற எண்ணம் மனதில் அடிக்கடி தோன்ற ஆரம்பித்து விட்டது .  ஏனெனில் டெல்லி ஏர்போர்ட்க்கும் பழைய டெல்லி ரயில் நிலையத்திருக்கும் குறைந்தது ஒரு மணிநேரம்மாவது ஆகும் என்று எல்லாரும் கூறினார்கள் அதே வேலை விமானம் இறங்குவதற்கு கொஞ்சம் நேரமானாலும் நம்மால் அந்த ரயில புடிக்க முடியாது என்றும்  கூறினார்கள் .

ஓம் கிரியா பாபாஜி நம அஉம்  என்று மனதில் உச்சரித்து விட்டு பயணத்தை வீட்டில் இருந்து தொடங்க ஆரம்பித்தோம்.

என்ன நடந்தது என்று நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

இமயமலையில் உள்ள பாபாஜியின் குகை தரிசனம்...


                                        ஓம் கிரியா பாபாஜி நம அஉம்.

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கடந்த இரண்டு வாரங்களாக  எந்தவொரு பதிவினையும் எம்மால் பதிவு செய்ய முடியவில்லை ஏனெனில் நாங்கள் அனைவரும் பாபாஜியின் குகை தரிசனத்திற்காக சென்றுவிட்டோம்.

"எதுவும் நம் கையில் இல்லை" என்பதருக்கு இந்த யாத்திரை ஒன்றே போதும் என்னும் அளவிற்கு சிறப்பாக அமைந்தது.

என்னதான் நாம் திட்டங்கள் போட்டு நடத்தினாலும் அவன் அருளின்றி எதுவும் நடைபெறுவதில்லை .

அவனின்றி அவன் தாள் வணங்கமுடியாது என்பதும் இந்த யாத்திரையின் மூலம் புரிந்தது .

கடுமையான நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட நாங்கள் எப்படி பாபாஜியின் மூலம் காப்பாற்றப்பட்டோம் என்றும் ,  அவர் எங்களிடம் எப்படி உரையாடினார் என்றும். அவர் எங்களுக்கு எப்படி அமுதளித்தார்  என்றும் பின்வரும் நாளில் காணலாம் .

அவர் நடத்துகின்ற ஒவ்வொரு அற்புதத்தையும் நினைக்கும்போது  என்  நெஞ்சம் ......சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ....

இந்த இமயமலை யாத்திரை அவரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல நடந்தது. தாய் வீட்டுக்கு சென்று வந்தது போல இருந்தது .

பல ஜென்மங்கள் கூடவே இருந்து உரையாடிய உணர்வு எங்களுக்கு பல இடங்களில் ஏற்பட்டது . அவர் சூட்சமாக உலாவருவதை எம்மால் உணர முடிந்தது .  அவரை நினைக்கும்போதெல்லாம் உடல் சிலிர்க்கும் .அவரை பார்க்க நினைக்கும்போது எங்களுக்கு முன்னால் அவர் சென்றதை நினைக்கும்போது உடல் சிலிர்க்கிறது .

அவரின் அருளோடு இந்த யாத்திரையின் சில பகுதிகளை வரும் நாள்களில் பகிர்ந்து  கொள்கிறேன்..


"இதுவும் எமது குருநாதர் அகத்தியர்  உத்தரவின் பெயராலே நடைபெற்றது ".

ஓம் கிரியா பாபாஜி நம அஉம். 

என்றும்-சிவனடிமை-பாலா.

சனி, 13 ஆகஸ்ட், 2011

அடியேனின் பிறந்த நாள்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பிறந்த நாள் வாழ்த்து   அனுப்பிய  அனைத்து  நல்ல  உள்ளங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்கிறேன்.

 முகம் தெரியாத எத்தனை முகங்களின் உண்மையான அன்பினை கண்டு
மனம் உண்மையிலே  தான் நெகிழ்ந்து போகிறது .

இதுவரை சாதித்தது என்னவென்று பார்த்தால் ஒன்றும் இல்லை .
ஆன்மிகத்திற்கு வயது தேவையில்லை அவன் அருள் ஒன்று இருந்தாலே போதும்.

பொறுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக  எதையும் பயிற்சி செய்யாமால் இருந்தால் எதுவும் கிடைக்காது .

பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாத எல்லா குழந்தைகளும்  அனாதைகள் தான் இதில் நானும் ஒன்று.

சித்தர்கள்  விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று .

பாசம் என்பது எவ்வளவு கொடியது என்பது பாசத்தில் இருந்து விடுபடும்
ஒருவனுக்கு தான் தெரியும் . எல்லாவற்றையும் கடந்து தான் வரவேண்டும் என்பது சித்தர்களின் கொள்கையாக கூட இருக்க தோன்றுமே என்று எனது மனம் கூறுகிறது. 


உயிர் என்ற தத்துவத்தை உணர்ந்தவனுக்கு இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் சமம் தான் இதில் அவனுக்கு எந்தவொரு பேதமும் இல்லை .

பாம்பாட்டி சித்தர் பாடலில் இருந்து

  மணக்கோலங் கொண்டும் மிக மனமகிழ்ந்துமே
  மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
  பிணக்கோலங் கண்டு பின்னுந் துறவாவிட்டால்
  பிறப்புக்கே துணையா மென்றாடாய் பாம்பே ...

பட்டினத்து அடிகளின் பாடலில் இருந்து

  தாய் தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
  காய் பறிக்கிராயே கனியிருக்க ---தாய் தந்தை
  எத்தனைபேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
  எத்தனைபேரைப் பெற்றோமோ இங்கு .....

 பத்திரகிரியாரின் பாடலில் இருந்து

தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனிற் கண்டு திருக்கறுப்ப தெக்காலம் ....


 என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

பிருகு முனிவரின் பாடலில் இருந்து ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
                            ஆசையை தள்ளு
       என்னவே பிறர் மனை மேல் ஆசை தள்ளு
           எடுத்தோத பிறர் பொருளின் ஆசை தள்ளு
       கன்னமே வைக்காதே காமந் தள்ளு
           கண்மணியே மாங்கிசமும் புகையுந் தள்ளு
       பின்னமே வேண்டாம்பார் மாய்கை  தள்ளு  
           பிசக்குள்ள கசடரை நீ சாடித் தள்ளு
       கன்னமுடன் தாம்பூலங் கள்ளு கஞ்சா
           சுகமில்லா பொய் முதலாங் கோபந் தள்ளே....

எளிமையான தமிழில் உள்ள இதற்க்கு விளக்கம் தேவை இல்லை ..

மாந்திரகத்தை கற்று கொள்ளவேண்டியவன் தள்ளவேண்டியவை இவை ..


என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சதுரகிரியில் உடல் பூமியை விட்டு கிளம்ப ஆரம்பித்தல் ......

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு , 

நேற்றைய தொடர்ச்சி ,

           இரவு ஒன்பது மணிக்கே தூங்க ஆரம்பித்து விட்டேன் . எல்லாம் மகாலிங்கத்தின் செயல் என்று நினைத்து கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டேன். எனக்கு மனதில் எப்படியும் இந்த வருடம் அந்த நட்சத்திர தரிசனம் பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றியது .   இருப்பினும் மகாலிங்கம் நல்ல உணவினை கொடுத்து எம்மை  தூங்க வைத்துவிட்டார் . 

 என்னுடன் உள்ள நண்பர்கள் எல்லாரும் மகாலிங்கத்தின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் . அதனை கேட்டு கொண்டே நான் என்னை மறந்து தூங்க ஆரம்பித்தேன் .  திடீரென என் உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை  உணர்ந்தேன் . நாங்கள் தூங்கிய இடம் சிவா சித்தரின் ஜீவசமாதி ஆகும்.   ஆகையால் இது அவரின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது .

நான் ஒரு கட்டிலில் உறங்குவது போல கனவு கண்டேன் , ஒரு மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்று எனது கட்டிலுக்கு அடியில் வந்து என்னை பார்த்தது . என் மனமோ நம்மை பாம்பு கடித்தால் நமக்கு  பிடித்த பீடைகள் விளங்கும் என மனது நினைத்தது. ஆனால் அது என்னை உற்றுப்பார்த்து விட்டு பின் அதன் தலையால் என்னை தூக்க அது முயற்சித்தது .

அதனால் என்னை தூக்கமுடியவில்லை . திடீரென அதன் உருவம் அதிகரித்து எனது பாதத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக என்னை தூக்க தூக்க எனது உடலும் பாம்பு தூக்குவதுர்க்கு ஏற்றார்போல வளைந்து கொடுத்து வந்தது . கொஞ்சம் நேரம் கழித்து எனது உடல் எனது கட்டப்பாட்டில் இல்லை . கடலில் வரும்  அலைகள் போல் எனது உடல் அசைந்து அசைந்து ஆடி கொண்டு இருந்தது .பாம்பு எப்படி நெளிந்து ஓடுமோ அதுபோல எனது உடல் நெளிய ஆரம்பித்தது .

பின் எனது உடல் மெதுவாக மேலே கிளம்புவதற்கு தயாராக இருந்தது .இதுவெல்லாம்  நடப்பது எனக்கு நன்றாக தெரிந்தும் ,என்னால் எனது உடலை கட்டுபடுத்த முடியவில்லை  .

நான் சுதாரித்து கொண்டு குருநாதரின் மந்திரத்தை கூறியபோது ,எனது உடல் மெதுவாக கீழே இறங்கியது . அகத்தியரின் மந்திரத்தை கூறிக்கொண்டே எழுந்திரித்தேன் . அப்போது சரியாக இரவு  மணி 12  ஆகும் . கண் திறந்து பார்த்தபோது வானில் அந்த நட்சரத்தை பார்த்தேன்.  பின்  குருவே நீயே துணை என்று  கூறிவிட்டு படுத்துவிட்டேன்.

அதற்குபின் எனக்கு தூக்கம் வரவில்லை ,மனதில் ஒரே குழப்பம் ,ஏன் இதுமாதிரி கனவும் நினைவும் உணர்வும் சேர்ந்து வருகின்றது .

எனது உடல் பாம்பு போல நெளிந்து ,பின் ஆகாயத்தில் பறப்பதற்கு தயாராக இருந்ததை  இப்ப நினைத்தாலும் கொஞ்சம் பயமாகவும் அதே நேரம்ஆச்சர்யமாகவும் இருக்க  தான் செய்கிறது .  


இதன் விளக்கம் என்னவென்று  எனக்கு தெரியவில்லை . தெரிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

சித்தர்களின் விளையாட்டா ? 
ஆதி சித்தனின் விளையாட்டா ?
இல்லை என் மனதின் விளையாட்டா ?


மறுநாள் சாப்டூர் பாதையில் பயணித்து  இந்த பயணத்தை முடித்து கொண்டேன்.  இந்த பாதை கொஞ்சம் கடினம் தான் இருந்தாலும் கைலாயத்திற்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு மன திருப்தி ஏற்பட்டது .


எங்கும்  நிறைந்த சிவன் எல்லாமாகவும் இருக்கிறான் .
புரிந்தும் புரியாமாலும் தெரிந்தும் தெரியாமாலும் நடக்கின்ற ஒவ்வொரு  செயலும் நமக்கு நன்மையே செய்கிறது .
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஆடி அமாவாசை நிகழ்வின் தொடர்ச்சி .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
 
 சரியாக 9  மணிக்கு சந்தன மகாலிங்கத்தை அடைந்தபோது , அங்குள்ள மக்கள் கூட்டத்தை பார்த்து மயங்கி போனேன் . எங்கள் ஊரை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட மக்கள் எம்மை வரவேற்றார்கள் . பின் தலையாட்டி சித்தர் மடத்தை சேர்ந்த அனைவர்களும் வரவேற்று அங்கு எம்மை தங்குமாறு அழைத்தார்கள் .  நானும் சரி என்று கூறிவிட்டு அங்கு அமர்ந்து விட்டு பின் மகாலிங்கத்தை தரிசனம் செய்ய புறப்பட்டேன்.  காவல் அதிகாரிகளோ ஐயா வரிசையில் வாருங்கள் என்று கூறினார்கள் . சரியான கூட்டம் வேறு , நான் கூறினேன் , ஐயா நான் சாமி  கும்பிடவரவில்லை மகாலிங்கத்திருக்கு சேவை செய்ய தான் வந்துள்ளேன் என்று கூறியதும் ,என்னை நேரடியாக தரிசனம் செய்ய அனுமதித்தார்கள் .

அங்கு சென்றதும் ,அப்போது தான் தலைவருக்கு தீப ஆராதனை ஆரம்பித்தது . நல்ல தரிசனம் கிடைத்தது . பின் வழக்கம் போல மக்கள் சேவையில் இறங்கி விட்டேன், தரிசனம் செய்ய வரும் பக்தர்களை ஒழுங்கு படுத்தி வரிசையில் அனுப்பவதை மேற்கொண்டேன், உடன் காவல் அதிகாரிகள் இருந்தாலும் ,எமது கடமையை சிரமேற்கொண்டு செய்தேன், அன்றைய மாலை தலையாட்டி சித்தர் மடத்தின் சார்பில் நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்டு அதையும் சிறப்புற செய்தேன் .

இந்த வருடம் , காவல் அதிகாரிகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டார்கள் .
காட்டு தீ பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் தானிபாறையிலே தங்க வைக்க பட்டார்கள் , ஆகையால் தரிசனம் செய்ய வந்த மக்கள் கூட்டம் கட்டுபாட்டுகுள்ளே இருந்தது .

கோவில் சேவையில் உள்ளவர்களுக்கு எப்போதும் தனி மரியாதை அங்கு  உண்டு ,அவர்கள் தங்குவதற்கு இடமும், உணவும் தரப்படும் . இந்த வாய்ப்பு கிடைப்பதற்கும் அவன் அருள் தேவை.
அன்றைய சேவை முடிந்தவுடன் வழக்கம் போல தூங்க சென்றேன். அங்கு எம்மை போல நிறைய நண்பர்கள் இருப்பார்கள் .எல்லாரும் ஆடி அமாவாசைக்கு கண்டிப்பாக வந்து விடுவார்கள்.
ஆகையால் எங்களிடம் தூக்கம் வராது . ஏதாவது மகாலிங்கத்தின் மகிமையை பத்தி பேசி கொண்டு இருப்போம்.

வழக்கம் போல இந்த வருடமும் சித்தர்களின் தரிசனத்திருக்கு காத்திருந்தேன் . 
மகாலிங்கம் ரொம்ப புத்திசாலி . ஏனெனில் வரும் பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அன்னத்தை தந்து உறங்க வைத்து விடுவார். இதனை மனதில் கொண்டு நான் கொஞ்சமாக இரவு உணவினை உண்டுவிட்டு காத்திருந்தேன் .

ஆனால் வழக்கம் போல உறங்கிவிட்டேன் . அப்போது ஒரு அருமையான நிகழ்வு நடந்தது. நான்  உறங்கிக்கொண்டு இருந்த இடம் சட்டைநாதர் சித்தரின் குகைக்கு மேல். அங்கு தான் சிவா சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . அந்த ஜீவசமாதியின் அருகே தான் நான் உறங்கி கொண்டு இருந்தேன் .

அந்த அற்புத நிகழ்வினை நாளைய பதிவில் பதிவு செய்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பலவேறு பணிகளுக்கு இடையில் என்னால் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை. கடந்த ஆடி அமாவாசை திருவிழா மிக விமர்சையாக சதுரகிரியில் நடைபெற்றது.  தற்சமயம் இருக்கும் பணியில் விடுப்பு கிடைக்காதலால் வெள்ளிகிழமை அன்று தான் எனது பயணம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலம் ஆரம்பித்தது .

மதுரைக்கு வந்தடைந்ததுபோது சரியாக அதிகாலை மணி 2 ஆகும் . பிறகு தானிபாறைக்கு செல்லும் பேருந்தில்  இருந்து சதுரகிரிக்கு புறப்பட்டேன்.  வரும் வழியில் சதுரகிரி மலையில் காட்டு தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு மிகவும் மன வேதனை பட்டேன் .
நாங்கள் சென்ற பேருந்து தானிபாறையில் இருந்து  10 மைலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டது .

ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டது .  பிறகு நான் எனதுநடைபயணத்தை ஆரம்பித்தேன் .எனது பயணம் 10 கிலோ மீட்டர் தூரத்தை  ஒன்னே கால் மணி நேரத்தில்  நடந்தே  கடந்து விட்டேன் . சரியாக 6 :25 க்கு தானிபாறையை வந்தடைந்தபோது   அங்கு இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து வியந்து போனேன் . ஏறக்குறைய ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டம் அங்கு நிரம்பி இருந்தது.   

எங்கும் காவல் அதிகாரிகள் நிரம்பி இருந்தார்கள் ,யாரையும் அவர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கவில்லை . இரவு 11 மணி  முதல் மலை ஏறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை ஏனெனில் காட்டு தீ மக்கள் நடந்து செல்லும் பாதைக்கு அருகில் வந்துவிட்டதால் யாருக்கும் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள் .

மிகவும் மனசோர்வு அடைந்து விட்டேன் . "என்ன மகாலிங்கம் இவ்வளவு தூரம் நடந்து வந்து இப்படி பண்ணிட்டியே " என்று மனதில் அவரை நினைத்து கொண்டேன் .  காவல் அதிகாரிகளோ காட்டு தீ அணைந்தால் தான் நாங்கள் மலை ஏற அனுமதிப்போம் அதுவரை அமைதியாக இருங்கள் என்று கூறிவிட்டனர் . வேறு வழியில்  போகவேண்டுமானால் அது ரொம்ப சிரமமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு அருகில் இருந்த ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு சிந்தித்துக் கொண்டு இருந்தேன் .

அந்த பாறையில் அமர்ந்திருந்த கூட்டம் திடீரென ஒரு பாதைக்குள் செல்ல ஆரம்பித்தது . நானும் அவர்களை தொடர்ந்து அந்த பாதையில் சென்றேன் . அந்த பாதை சரியாக ஆசிர்வாத பிள்ளையார் இருக்கும் இடத்தை வந்தடைந்தது. எங்கள் எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். எப்படியோ மலை ஏறுவதருக்கு ஒரு வழி கிடைத்து விட்டது என்று சந்தோஷ பட்டோம் .

காலை 6 : 45 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தேன் ,என்னால் நடக்கவே முடியவில்லை ஏனெனில் அதிகாலை 4 மணிக்கே நடக்க ஆரம்பித்ததால் .எப்படியோ மகாலிங்கத்தின் அருளால் காலை 9 மணிக்கு சந்தன மகாலிங்கத்தை அடைந்தேன் . நான் எப்படி மலை ஏறிவந்தேன் என்று எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது .

அவனின்றி ஆவது ஒன்றும் இல்லை ......

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 26 ஜூலை, 2011

சித்தர்களின் மாந்திரிகம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கடந்த இரண்டு ,மூன்று வாரங்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பதிவு செய்ய முடியவில்லை .  சித்தர்களின் மாந்திரிகம் என்ற ஆராய்ச்சியில்  கொஞ்சம் மூழ்கியதால் பதிவுகளை செய்ய முடியவில்லை . அதே வேலை எமது  பாஸ்போர்ட் காலாவதி  ஆகிவிட்டதால் அதனை புதிப்பிக்கவே எனக்கு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது .
 
நல்ல அனுபவங்கள் நமது அரசாங்க அலுவலகங்களில் எனக்கு கிடைத்தது  நண்பர் குருசாமி அடிக்கடி  தமது வலைப்பூவில் இன்றைய அரசியல் மற்றும் அரசாங்க அலுவலல்களில் நடக்கும் நிகழ்சிகளை குறிப்பிடுவதை  என்னால் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது .
 
சென்னைக்கும் திருச்சிக்கும் ஏறக்குறைய 4  தடவை செல்லவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது .இது தான் நான் பதிவுகளை  பதிவு செய்ய முடியாதற்க்கான காரணாமாகும் .  அதேவேளை இந்த குறிப்பிட்ட காலத்தில் எனக்கு மூன்று சித்தர்களின்  மாந்திரிக நூல்கள் கிடைத்தது .
 
1 ) அகத்தியரின் மாந்திரிக காவியம்
2 ) கருவூரரின் அட்டமா சித்து
3 ) பிருகு முனிவரின் மாந்திரிக அரிசுவடி.
 
இந்த மூன்று நூல்களுக்கும் விரிவுரை இல்லை . இருப்பினும் அவர்களின் கருணையால் கொஞ்சம் கொஞ்சம் என்னால் படிக்க முடிகிறது .  இன்றைய போலி சாமியார்களின் நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தை வித்தைகளை சித்தர்கள் பாடி இருப்பதை கண்டு வியந்து போனேன் .
 
வருகின்ற  30 ஜுலை அன்று ஆடி அமாவாசை விழா  சதுரகிரியில் நடைபெற  இருப்பதால் என்னால் பதிவுகளை  பதிவு செய்ய  கொஞ்சம் கால  தாமதமாகும் என நினைக்கின்றேன்.  சித்தர்களின் தலைமையிடம் மற்றும் அனைத்து சித்தர்களும் கண்டிப்பாக வரவேண்டிய இடமும் நாளும்  அந்த நாள் ஆகும் . இந்த நிகழ்வுக்கும் அவர்களின் ஆசி இருந்தால் மட்டுமே போக முடியும் .
 
எமக்கு மாந்திரகத்தில் நம்பிக்கை கிடையாது இருப்பினும் சித்தர்களே அதனைப்பற்றி பாடி இருப்பதால் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசையாக தான் இருக்கிறது .
 
வரும் பதிவுகளில் சில பாடல்களை பார்ப்போம்.


என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 5 ஜூலை, 2011

சதுரகிரியில் நாங்கள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  , 

நேற்றைய தொடர்ச்சி ,

மகாலிங்கத்தின் பிறந்த நாள் அன்று இரவு என்னுடைய அனைத்து நண்பர்களையும் மற்றும் சுற்றத்தில் உள்ளவர்களை அழைத்து ஒரு சிறிய விருந்தினை கொடுத்து மகிழ்ந்தேன் .

அன்று எதிர்பார்த்த பலர் வரவில்லை அவர்களின் சூழ்நிலை அப்படி இருக்க வந்தவர்களோ மனமார மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .

அன்று இரவே நாங்கள் சதுரகிரிக்கு புறப்பட்டு விட்டோம். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது  என் மகனின் பிறந்த நாள் அன்று அவனுக்கு ஒரு ருத்ராட்சை வாங்கி கழுத்தில் அணிய வேண்டும் என்று.

இதனை என் மனைவியிடம் சொல்லியபோது ,மகாலிங்கம் கண்டிப்பா கொடுப்பார் கவலைபடாதிங்க என்று ஆறுதல்வார்த்தை கூறினாள்.
 நாங்கள் மதுரை வந்தடைந்துவுடன் எங்கள் சதுரகிரி வழிகாட்டி ஐயா வெங்கடேஷன் எங்களை வரவேற்றார் . அதற்குபின் அவர் இமயமலையில் இருந்து வாங்கிவந்த ஒரு அற்புதமான ருத்ராச்யை என் மகனின் கழுத்தில் கட்டினார் . அதனை கண்ட நான் ஆச்சயர்ப்பட்டு போனேன்.
 நாம் நினைப்பதை இறைவன் எவ்வகையாலவது நம்மிடம் சேர்த்து விடுகிறார் என்பதனை உணர்ந்தேன் .

அதற்குபின் சுந்தர மகாலிங்கத்திடம் சென்றபோது என் மகனை பார்த்த பூசாரிகள் அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள் . பின் அவனை தூக்கிக்கொண்டு சுந்தர மகாலிங்கத்தின் அருகே படுக்க வைத்துவிட்டு அவனுக்கு ஒரு மாலையை அவன் கழுத்தில் போட்டு என்னிடம் கொடுத்தார்கள் .  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,எல்லாம் அவன் செயல் என்று உணரபெற்றேன் .

பிறகு கும்பகிரி அகத்தியர் மடத்தை சேர்ந்த சித்தர்களிடம் ஆசி பெற்று அங்கு காலை உணவினை உண்டோம் . பின் சந்தன மகாலிங்கத்தை பார்க்க புறப்பட்டோம் .

அங்கும் நல்ல வரவேற்பு ,அனைவரும் மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .
 நான் அங்கு சென்று ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகிவிட்டது அவனின்றி அவன் தாள் வணங்க முடியாது என்பது போல் அவன் அருளின்றி சதுரகிரி மலை ஏற முடியாது என்பதனை நான் உணர்ந்தேன் . அன்று மாலை அருமையான அபிஷேகங்கள் நடந்தது . அதற்க்கு பின் மகாலிங்கத்திடம் என் மகனுக்காக வேண்டி கொண்டோம் .

அங்கு அபிசேகம் நடந்த போது சந்தன மகாலிங்கத்தின் முகத்தில் பல உருவங்கள் தோன்றி மறைந்ததை எங்களால்  காண முடிந்தது . நந்திக்கு ரொம்ப முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது என்ற ஞானம் எனக்கு அன்று தான்
கிடைத்தது .

பிறகு மெதுவாக மழை பெய்ய தொடங்கியது , இதுவும் ஒரு அதிசயம் தான் .
பக்தர்களின் குறையை கேட்பதில் மகாலிங்கத்துக்கு நிகர் யாரும் இல்லை .

நாங்கள் மலை ஏறும்போது என் மனைவி வெங்கட் ஐயாவிடம் கூறினாள்  , இன்னைக்கு மழை பெய்தால் நாங்க வந்தத அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என்று . அதே போல் மழையும் பெய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
மறுநாள் காலை என் மகனை சந்தன மகாலிங்கத்திடம் ஒப்படைத்துவிட்டேன்.

அவனை மகாலிங்கத்தின் முன் படுக்க வைத்து சித்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு பின் தத்து எடுத்துகொண்டோம் . இனிமேல் அவன் எங்கள் சொத்து இல்லை என்றும் இனிமேல் அவன் சித்தர்களின் சொத்து என்று கூறி  சத்திய பிரமாணம் எடுத்து கொண்டோம்.

இனிமேல் நாங்கள் வளர்ப்பு தந்தையும் தாயுமாக மகாலிங்கத்தை பார்க்கும் பொறுப்பினை சித்தர்கள் எங்களிடம் தந்து விட்டார்கள் .

பிறகு மதுரை வந்து அன்னை மீனாட்சியை தரிசினம் செய்து கொண்டோம்.
என் மகன் மதுரை கோயில் இறங்கி தானே நடக்க ஆரம்பித்து விட்டான்.
யார் கூப்பிட்டும் அவன் செல்லவில்லை அதுவும் எனக்கு ஒரு ஆச்சர்யமாக இருந்தது .

நாளைய பதிவில் இருந்து சித்தர்களின் பாடல்களையும் அதற்க்கான விளக்கத்தையும் நாம் மீண்டும் தொடருவோம் ...

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 4 ஜூலை, 2011

மகாலிங்கத்தின் பிறந்த நாள் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் பிறந்த நாளுக்கு ஆசிர்வதித்த அனைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

முகம் தெரியாத உள்ளங்கள் வாழ்த்துவது என்பது உண்மையிலே மிகச் சிறந்தது. 
எவ்வித எதிர்ப்பார்ப்பையும் எதிர்பாராமல் வாழ்த்துவது அதைவிடச் சிறந்தது.

எனது மகனின் பிறந்த நாளன்று மதியம் கௌதம புத்தர் அறக்கட்டளையில் அன்னத்தானம் நடைப்பெற்றது . காது கேளாதோர் மற்றும் பேச முடியாத நிறைய குழந்தைகள் அங்கு இருக்கிறார்கள்.  அவர்கள் கூறிய நன்றி வார்த்தையும் ,அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததையும் நான் கண்டபோது எனது இரண்டு கண்களும் குளமாகி விட்டது .

அழகான பெண் குழந்தைகள் ஆனால் பேசமுடியவில்லை இருப்பினும் மகாலிங்கத்தை(என் புதல்வன் ) தூக்கி கொண்டு அவர்கள் கொஞ்சியத்தை என்னால் மறக்க முடியாது.

அங்குள்ள முதியவர்களிடம் அவன் விளையாடியதை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவர்களுடன் நாங்களும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவினை உண்டோம். 
வாழ்வில் மிக சந்தோசமான நாளாக அது அமைந்தது.  இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு மருந்தாக (மன நோய்க்கு )அமைந்தது .

என்னை ஈன்ற என் பெற்றோர்கள் கூட என்னை கூப்பிட மனமில்லாதவர்களாக உள்ள இந்த நிலையில் யாரும் ஆதரவற்ற பிஞ்சு உள்ளங்களை பார்த்த போது எனக்கு உலகமே ஒரு மாயை என்ற தத்துவம் உணர்ந்தது.

சித்தர்களை வழிபடுவதும் அவர்களின் வாழ்வியல் பாதையில் நடப்பதும் என்பது சாதாரண விஷயம் அல்ல .

அவர்களின் வழிகாட்டுதல் படி நான் சாதி , சமயங்களை வெறுத்து கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். திருமணத்தினால்  நான் அனைத்தையும்(பெற்றோர்களை ) இழந்துவிட்டேன்.

உயிருடன் இருக்கும் என்  ஐயா மற்றும்  அம்மாவை(பெற்றோர்கள் )வாயார கூப்பிட முடியாத அளவிருக்கு நான் பாவியாகிவிட்டேன் . ஆகையால் தான்  நான் உலகில் உள்ள அனைத்து உள்ளங்களையும் ஐயா என்றும் அம்மா என்றும் கூப்பிட்டு வருகிறேன்.

பெற்ற தாயே ஆயினும் கலப்பு என்பதை விரும்பமாட்டாள் போல் இருக்கிறது.

உண்மையிலே எனக்கு சித்தர்கள் நடத்துக்கின்ற ஒவ்வொரு பரிட்சையும் வித்தியாசமாக தான் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.  இருப்பினும் அவர்களின் கருணையால் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்து வருகிறேன்.

இதனையே பட்டினத்தார் பின்வருமாறு கூறுகிறார்..

பிறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  பிறந்துமண் மேல்
இறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே ..

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
   பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
    மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
    என்செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே ..
  
மகாலிங்கத்துடன் சதுரகிரி சென்றதை நாளைய பதிவில் காணாலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 28 ஜூன், 2011

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள்(29/06)

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள் வருகின்ற புதன்கிழமை (29 /06  ) எனது இல்லத்தில் நடைபெறுகிறது .

சித்தர்  முழக்கங்களை படித்து வரும் சித்தர்களின் ஆசி பெற்ற உங்களின் ஆசிர்வாதங்களை   என்னுடைய புதல்வனுக்கு வழங்கும்படி அடியவர்களின் அடியை பற்றி வேண்டிகொள்கிறேன்.

அவருடைய பெயர் ஜெயசிவமகாலிங்கம்.

எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து முழுக்க முழுக்க சதுரகிரியின் சந்தனத்தில் விழைந்தவர் .

அவர் அவதரித்தே ஒரே சுவாரஷ்யமான கதை தான். அதைப்பற்றி வரும் நாள்களில் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்புவியில் ஜனனம் எடுப்பதற்கு முன்பே சித்தர்களின் ஞான கோவையை முழுவதும் அறிந்தவர்.

உங்களின் பூரண ஆசிகளை மனமார எதிர்ப்பார்க்கும் .....


நாளை மதியம் பெரம்பலூரில் உள்ள  கௌதம புத்தர் அறக்கட்டளையில் இருக்கும் காது கேளாதோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னத்தானம் நடைபெறும்.

இது விளம்பரத்திற்கு அல்ல , அவர் அவதரித்தருக்கு பின் தான் என் வாழ்வில் நிறைய மாற்றம் ஏற்பட்டது அதில் இதுவும் ஒன்று ..

என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 23 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை தொடர்ச்சி 61-->102

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு , 

இன்றைய பதிவுடன் பட்டினத்து அடிகளின் பூரணமாலை முற்றுபெறுகிறது . இதற்க்கான விளக்கம் கூடிய விரைவில் வரைய முயற்ச்சிக்கிறேன் .  இதுகாறும் இப்பதிவினை படித்து வந்தும், பலருடன் இதனை பற்றி பேசியவர்களும் நிச்சயம் கூடிய விரைவில் ஞானத்தை பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .
உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை தான் பின்வரும் பாடல்கள் கூறுகிறது. 

இறைத்தன்மையை  அகத்திலும் புறத்திலும் காண முயலுங்கள் . இதுவே ஞானத்தின் ஆரம்பம்.
 61 ) வானில் கதிர்மதியாய் வளர்ந்த பின் ஒன்று ஆனது போல்
         ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே !

 62 ) பொய்யும் புலையும் மிகப்பொருந்தி வீண் பேசலின்றி
         ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே !

 63 ) நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
        பரம் அதுவே எனைப் பதம் அறியேன் பூரணமே !

 64 ) கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
         செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே !

 65 ) வாரிதியாய்  வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்ட எல்லாம்
         சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே !

 66 ) வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
         சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே !

 67 ) தத்துவத்தைப்  பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
         உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே !

 68 ) ஒன்றாய் உயிராய் உடல் தோறும் நீ இருந்தும்
         என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே !

 69 ) நேற்றும் என்றும் நாளை என்றும் நினைப்பு மறப் பாய்படைத்தும்
         மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே !

 70 ) மனம் புத்தி சித்தம் மகிழ் அறிவு ஆங்காரமதாய்
         நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே !

 71 ) உருப்பேதம் இன்றி உய்ந்த சப்த பேதமாய்க்
         குருப்பேதமாய் வந்த குணம் அறியேன் பூரணமே !

 72 ) சட்சமய பேதங்கள் தான் வகுத்துப் பின்னும் ஒரு
         உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே !

 73 ) முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்து படைத்த உள்ளிருந்த
         செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே !

 74 ) என்னத்தான் கற்றால் என் ? எப்பொருளும் பெற்றால் என் ?
        உன்னை அறியாதார் உய்வரோ ?  பூரணமே !

 75 ) கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
         பெற்றரியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே !

 76 ) வான் என்பார் அண்டம் என்பார் வாய் ஞானமே பேசித்
         தான் என்பார் வீணர்  தனை அறியார் பூரணமே !

 77 ) ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குள் நடுவாய் இருந்த
         சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே !

 78 ) மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
         பேச்சென்பார்  உன்னுடைய பேர் அறியார் பூரணமே !

 79 ) பரம் என்பார் பானு என்பார் பாழ் வெளியாய் நின்ற
         வரம் என்பார் உன்றன் பேர் அறியார் பூரணமே !

 80 ) எத்தனை பேரோ எடுத்தெடுத் தான் உரைத்தார்
         அத்தனை பேருக்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே !

 81 ) நகார மகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
        வகார யகாரம் என்பார் வகை அறியார் பூரணமே !

 82 ) மகத்துவமாய்க்  காம மயக்கத்துக் குள்ளிருந்து
         பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே !

 83 ) உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
         பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே !

 84 ) வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
         காயம் எடுத்து கலங்கினேன் பூரணமே !

 85 ) சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்
         பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே !

 86 ) செந் தாமரைத்தாளை தினந்தினமும்  போற்றாமல்
         அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே !

 87 ) நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
        தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே !

 88 ) நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
         வஞ்சககத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே !

 89 ) எள்ளுக்குள் எண்ணெய்போல்  எங்கும் நிறைந்திருந்து
         உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே !

 90 ) மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
         ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே !

 91 ) பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
         ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே ! 

 92 ) படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெலுத்தைத்
         துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே !

 93 ) மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
         தந்திரத்தை நான் அறிய தகுமோ தான் பூரணமே !

 94 ) அல்லாய்ப் பகலாய் அனவரது காலம் எனும்
         சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே !

 95 ) நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
        அரகரா என்பது அறிகிலேன் பூரணமே !

 96 ) பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
         ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே !

 97 ) சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிமதங்கள் என்றும்
         பாந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே !

 98 ) பாசம் உடலைப் பசு அதுவும் தான் உயிராய்
        நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே!

 99 ) ஏதில் அடியார் இரங்கி இகத்துள் வந்துன்
         பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே !

 100 ) நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
           தேனின் ருசியது போல் தெவிட்டாய் பூரணமே !

 101 ) முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
           அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே !.

 102 ) பூரணமாலை தனை புத்தியுடன் ஒதினருக்கு
           தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே !.

                                    பூரணமாலை முற்றும்.
 என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 22 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை -->51-60

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சித்தர்களை பற்றி எழுவது என்பது சாதாரண செயல் அல்ல ,அவர்களின் கருணையால் மட்டும் தான் எழுத முடியும் இந்த பூரனமாலையை எழுத ஆரம்பித்த போது இருந்த வேகம் இப்போது என்னிடம் இல்லை . இருப்பினும் அடியேனின் பிழையை மன்னித்து அவர்களின் கருணை பார்வை எம்மேல் பட்டு மீண்டும் ஆவலுடன் பல சித்தர்களின் பாடல்களை தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி  கேட்டு கொள்கிறேன்.

விளக்கம் : 41 -->50 ..
//நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து//-இந்த ஜீவன் வாழும் இடத்தினை பற்றி குறிப்பிடுகிறார்
//சிலந்தியிடை நூல்போல்  சீவசெந்துக் குள்ளிருந்த //-பந்த பாசங்களை பற்றி குறிப்பிடுகிறார் .
//குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய் //-பரம்பொருள் வாழும் குடில் என்று குறிப்பிடுகிறார்.
//ஒளியாய் கதிர்மதியாய் உன் இருளாய் அக்கினியாய் //-இறைவனின் உருவமானது எப்படி வெளிப்படும் என்பதை குறிப்பிடுகிறார்.

//இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்//-இங்கு உடலை இடைகலையாகவும் உயிரை பிங்கலையாகவும் ஜீவனை சுழுமுனையாகவும் குறிப்பிடுகிறார்.
//மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து//-தாம் எவ்வாறு கருத்தரித்து இந்த உலகில் வாழ்ந்து வளர்கிறோம் ஆனால் எமன் வரும் நாளை நம்மால் அறிந்து கொள்ளமுடியாமல் போகிறது. அவன் வரும் நாளை அறியும் கணக்கு தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். வாசியை கொண்டு அவனை வெல்ல முடியும் வேறொரு வழி எதுவும் கிடையாது. .

//உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது//-உடலில் சிவனை காணுதல் .
//தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம் //-பந்த பாசங்களில் சிவனை காணுதல்.
//குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பு அறியேன்//-சிவனை அறிதல்
//ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய் //-ஆண் ,பெண் பேதமின்றி கூறுதல் .

பூரணமாலை தொடர்ச்சி....

51 ) வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
       பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே !

52 ) பொய்யாய்ப் புவியாய்ப் புகழ்வா ரிதியாகி
       மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!

53 ) பூவாய் மணமாகிப் பொன்னாகி  மாற்றாகி
       நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே !

54 ) முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய்
       இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே !


55 ) ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
       தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே !

56 )  வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
        சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே !

57 ) ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம்  எல்லாம்
       தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே !


58 ) மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து
       நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே !

59 ) சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
       சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே !

      
60 ) பொறியாய்ப்  புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
        அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே !..



http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 20 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரண மாலை தொடர்பில் பின்னடைவு....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு   ,

 கடந்த ஒரு வாரமாக என்னால் எந்தவொரு பதிவுகளையும் பதிவு செய்ய முடியவில்லை . இதற்காக முதலில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.  தினந்தோறும் எனக்கு சித்தர்களின் உத்தரவு வந்தால் தான் என்னால் எழுதமுடியும் . 

பல அன்பர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடந்த வாரம் பேசினார்கள். எல்லாருக்கும் உள்ள ஒரே ஆவல் புண்ணிய ஆத்மாக்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்று தான் ?. 

இந்த தொடர்பு பூர்வ  ஜென்ம பலனை கொண்டுதான் வரும். இதனை விட்டுவிட்டாலும் இதன் தாக்கம் இன்று வரை எனக்குள் நடந்து கொண்டு தான் இருக்கிறது .  எனக்கு மிகவும்  வேண்டப்பட்ட இரண்டு நண்பர்கள் கடந்த மாதம் வந்து இக்கலையை கற்றுகொண்டார்கள் . இதில் ஒருவருக்கு கொஞ்சம் தான் அதிர்வலைகள் வந்தது. 
மற்றொரு நண்பருக்கு நல்ல அதிர்வலைகள் வந்தது .

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவரின் நிலையை பற்றி அருமையான தகவல்கள் அவருக்கு கிடைத்தது. எல்லாரும் கைவிட்ட நிலையில் மகா அவதார் பாபாஜியின் கருணையால் இன்று நலமாக உள்ளார் . ஏனெனில் அந்த நண்பருக்கு வழிகாட்டியாக பாபாஜி வந்துள்ளார்.

எல்லாமே பூர்வ ஜென்ம பலம் .

நம்ப முடியாத பல ஆச்சர்ய தகவல்கள் நமக்கு வழிக்காட்டிகளின் மூலம் நமக்கு கிடைக்கும். 

இது ஒரு வகையான மருத்துவ முறை தான் . இதனால் மனதில் தோன்றும் எண்ணங்களை களைய முடியும், எதிர்கால திறனை அறிந்து கொண்டு நமது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள முடியும்.

"கலைகள் உம்மை தேடிவரும் காலன் வருமுன் "

"எம்மை பற்றி "-இந்த வலைப்பூவில் உள்ள நிழற்படமானது நான் அல்ல ஆனால் அதனைப்போல் நான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பதஞ்சலி சித்தர் அவர்களின் உருவ படத்தினை வைத்திருக்கிறேன். 

இந்த படத்தை யாரோ ஒரு ஓவியன் வரைந்து இருக்கிறான் என்ற எண்ணம் என் மனதிலும் ,எல்லார் மனதிலும் உள்ள ஒரு மிகப்பெரிய சந்தேகம் ஆகும்.

ஆனால் உண்மையிலே இந்த உருவத்தை போல் ஒரு உருவத்தை நேரில் நீங்கள் தரிசிக்க நினைத்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

பதஞ்சலியாரின் தெய்வ தரிசனம் எமக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் 
( ஞாயிற்று கிழமை) கிடைத்து . அதன் அனுபவத்தை கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். 


அந்த சித்தரின் தரிசனம் இனிமேல் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதே  என்ற மன ஆதங்கம் தான் என்னை கடந்த நான்கு நாட்களாக பாடாய்ப்படுத்துகிறது .

பட்டினத்து அடிகளின் பூரணமாலை முடிந்த பிறகு பதஞ்சலியாரின் தரிசனத்தை பற்றி எழுதுகிறேன்.

தொடரும்....
 என்றும்-சிவனடிமை-பாலா.